Showing posts with label விருத்தாசலம். Show all posts
Showing posts with label விருத்தாசலம். Show all posts

பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்

0 comments
முன்னாள் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரி முதல்வரான  பேராசிரியர் பி.விருத்தாசலம்  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும்  பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.

என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
நன்றி, வணக்கம்.

பேராசிரியர் பி.விருத்தாசலம் எழுதிய நூல்கள்
1. சான்றோர் சிந்தனைகள்
2. காவிரிக்கரை வேங்கடம்
3. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
4. கண்ணகி சிலம்பீந்த காரணம்
5. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
6. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
7. சிந்தனைச் சுடர்
read more...
பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்SocialTwist Tell-a-Friend