கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு திருச்சி நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதி்த்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (20). அவர் பிளஸ் டூ படிக்கையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ராமஜெயம்(26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இது பற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவர் பிளஸ் டூ முடித்த கையோடு அவரை திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவில் உள்ள தாத்தா பிச்சை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். சரண்யா தாத்தா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சரண்யாவைப் பின்தொடர்ந்து ராமஜெயமும் திருச்சிக்கு சென்றார். ஆனால் ராமஜெயம் தனக்கு தொல்லை கொடுப்பதை விரும்பாத சரண்யா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சரண்யாவின் பெற்றோர் ராமஜெயத்தை சென்னைக்கு வரவழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திருச்சிக்கு வந்து கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி சரண்யாவுக்கு போன் செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு வந்தால் இதுவரை எழுதிய காதல் கடிதங்களை ஒப்படைப்பதாகவும், காதல் உறவை முறித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி சரண்யா தனது சித்தியுடன் ராமஜெயத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். கடிதங்களை பையில் இருந்து எடுப்பது போன்று நடித்து தான் வைத்திருந்த ஆசிடை எடுத்து சரண்யா முகத்தில் ஊற்றினார் ராமஜெயம். இதில் சரண்யாவின் முகத்தின் ஒரு பகுதி, தலை, காது, கழுத்து, முதுகு வெந்துவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். மாயாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அவர் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் ராமஜெயத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/27/youth-gets-10-year-jail-pouring-acid-college-girl-face-aid0128.html
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறைSocialTwist Tell-a-Friend

No comments: