ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்பு

சென்னை: அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த சாதனையையும் அதிமுக அரசு செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி வந்த செய்தி தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு நடந்த பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார் தா.பாண்டியன்.அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. கூட்டணியில் விரிசலா என்ற பேச்சும் கிளம்பியது.

இந்த நிலையில் தா.பாண்டியன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜுலை 6-ம் தேதியன்று மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் நான் பேசும் போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு மந்திரிகளை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டிப் பேசியதாக, சில ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தனர்.

20 கிலோ அரிசியை குடும்ப அட்டை உள்ளோர்க்கு இலவசமாக வழங்கிய மாண்பு, தனியார் கேபிள் இணைப்புகளை அகற்றி, அரசு கேபிள் இணைப்புக்கு நடவடிக்கை எடுத்திருப்பது, சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள், சொத்துக்களை மீட்டுக் கொடுக்க தனிக் காவல்துறை பிரிவை ஏற்படுத்தியிருப்பது, டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டின் சீர்கேடு, நிதிநெருக்கடிகளை விளக்கிக் கூறி, உணர்த்தியதன் மூலம் ரூ.23,500 கோடி அளவிற்கான பணத்தை திட்டச் செலவிற்காக பெற்று வந்துள்ள சாதனை ஆகியவற்றை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டி வாழ்த்தியுள்ளது.

எனவே குற்றம் சாட்ட வேண்டிய குறை ஏதும் கூறப்படவில்லை. மாறாக, மாநில அரசு மீது கடந்த கால ஆட்சி சுமத்தி விட்டுப் போயுள்ள அநியாய ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்சுமை, நிர்வாகச் சீர்கேடு, ஆகியவற்றை சமாளிப்பதில் நாமும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. நமது கடமை தேர்தலோடு முடிந்து விடவில்லை என்றே விளக்கி பேசினேன். மக்களுக்கு தெளிவு படுத்த இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என்று பாண்டியன் கூறியுள்ளார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/12/i-never-criticized-admk-govt-says-tha-pandian-aid0091.html
ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்புSocialTwist Tell-a-Friend

No comments: